Monday, August 31, 2009
மாயை!!!!!
இருப்பிலும் இல்லாமையிலும்
காலபெருவெளியில் மிதந்து அலைகின்றது!!!
நினைவு ரேகைகள்
ஞாபக வாசனையை பரவவிட்டுக் கொண்டே
நரம்புகளை அவிழச் செய்கின்றது!!!!
தூக்கமும் விழிப்பும் அற்ற நிலையில்
கிளைக்கும் அதன் தீனமான குரலில் தெரிகின்றது
பொங்கிகொண்டும் பெருகிக்கொண்டும்
இருக்கும் அதன் வேட்கைகள்!!!
நிம்மதியற்ற பயணங்களும் துரத்தல்களும்
மனதின் மென்மைகளைஉருமாற்றியதால்
மழை நாட்களை போல்
மனமும் புகையோடி போய் இருக்கின்றது!!!!
பல சமயங்களில்
வியூக சூட்சமம் அமைத்தும்
சில சமயங்களில் வெடவெடப்பும்
மெலிவும் கொண்டு மடிந்து சுருள்கிறது
ஆனாலும் மீண்டும் உயிர்த்து நிற்கிறது!!!!
Sunday, August 30, 2009
சுழற்புதிர்!!!
தயக்கங்களும் தவிப்புகளும்
வேடிக்கைகளும் வினோதங்களும்!!!
வலிகளும் வதைகளும்
பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!!
அலைப்புறுதலும் அவலமும்
நிறைந்த வாழ்கை பயணம்
ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!!
கடந்து வந்து விசித்திர பாதைகள்
கடந்த காலமெனும் தாழியில்
போய் விழுந்து விடுகின்றது!!!
காலமெனும் விசை
யாவையும் சுற்றிவிடுகின்றது!!!
அவமதிப்பு எனும் நிழல் நீள்வதும்
சுருங்குவதுமாய் தொடர்கின்றது!!!
ஆனாலும் பாதையின் தொலைவு
விலகாமல் நீண்டுகொண்டே செல்கின்றது!!!!
Saturday, August 29, 2009
என் அன்பு காதலா!!!! (To My Sweet Hubby)
சிறு பெண்ணாக உன் கையில்
ஒப்படைக்கபட்டேன்
சின்னச் சிறு நாற்றாக என்னை
உன் வீட்டு தோட்டத்தில் ஏற்று கொண்டாய் !!!!
அங்கு உள்ள ஆலமரத்திருக்கு
அடிபணிய கற்று குடுததாய்
நாணலாக வளைந்து போக சொல்லி தந்தாய்
உன்னால் எனது உலகம் இனிமை ஆனது !!!
பாறை ஆக இருந்த என் மனம்
உன் பார்வைகள் மூலம் பூ ஆனது
உன் முகம் பார்த்து இதழ் விரித்ததால்
நான் தாமரை ஆனேன்!!!
உன்னை தொடர்ந்து முகம் திருப்புவதால்
நான் சூரிய காந்தி ஆனேன் !!! சில நேரங்களில் விதியின் சதியால்
நான் எரிந்து சாம்பல் ஆனேன்
உன் அன்பால் உயிர்த்து எழுந்தேன்
பினிக்ஸ் பறவை ஆக !!!
எனக்கு தெரியும் நீ
என்னை விட அழகன் என்று
உன் அருகில் இருப்பதால் நான் அழகி ஆனேன்!!!
எனது வலிகளின் போது நீ துடித்தாய் ...
எனது பிதற்றலை நீ சகித்தாய் ...
என் கண்ணில் கண்ணீர்
காணும் போது நீ கதறி அழுதாய் ....
எனது பனி காலத்தில்
உனது பார்வை ஒன்றே போர்வையாக
எனது இளவேனிர்காலத்தில் குளிர் காற்று நீ
இருட்டிலும் என் நிழல் நீ
இறுதி வரை வரும் உறவு நீ !!!!
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டாய்
விலை மதிப்பில்லாத உன் காதல்
என்னிடம் இருக்கும் போது
விலை பெறகுடிய பரிசா நான் கேட்பேன்??
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது அன்பு மட்டும் போதும்!!!!
பி.கு : வலையுலகில் எனது முதல் கவிதை (கவுஜ) , மீள்பதிவு
Thursday, August 27, 2009
வண்ண வண்ண கனவுகள்!!!
வானவில்லின்
வர்ண சிதறல்களாய்
கண்ணிமைக்குள் ஜனித்திடுகின்றது
வண்ண வண்ண கனவுகள்!!!
அலைபேசியின் அலைகளோ
தொலைபேசியின் தொல்லைகளோ
இல்லா உலகிற்கு என்
கைப்பிடித்து நீ எடுத்தேகுவதாய்!!!!
அங்கு வானம் நம் இல்ல
வாசலில் நிறைந்திருப்பதாய்
விழி நீரில் நான் கோலமிடின்
உன் விரல் கொண்டு
நீ துடைப்பதாய்....
உன் அன்பான
கரங்களின் கட்டளைக்கு
நான் ஆட்படுவதாய்
நீண்டு கொண்டே செல்கின்றது
என் கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
கூட முடிவற்றதாய்......
Wednesday, August 26, 2009
விருதுகள் பலவிதம்!!!
மீண்டும் ஞானசேகரன், கடையம் ஆனந்த் மூலம் எனது தளத்திற்கு கிடைத்த விருது 20 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது
மிக குறுகிய காலத்தில் சிறப்பாய் பல பதிவுகள் மூலம் எனை ஆச்சரியப்படவைக்கும்
1.வித்யா - பக்கோடா பேப்பர்கள்
2.நேசமித்ரன் கவிதைகள்
3.ஜெஸ்வந்தி - மெளனராகங்கள்
4.பிரியமுடன் வசந்த்
5.கலையரசன் - வடலூரான்
6.பா.ராஜாராம் - கருவேல நிழல்
7. ஜமால் அண்ணா - கற்போம் வாருங்கள்
8.அ.மு.செய்யது - மழைக்கு ஒதுங்கியவை
9.தமிழரசி - எழுத்தோசை
10.இயற்கை மகள்
12. நவாஸ் அண்ணா - மனவிலாசம்
13. அபு அண்ணா - என் உயிரே
14. ரம்யா - WILL TO LIVE
15. ஷஃபிக்ஸ் ஷஃபி உங்களில் ஒருவன்
16. சுரேஷ் - என் பக்கங்கள்
17 . சந்ருவின் பக்கம்
18 பிரிவையும் நேசிக்கும் காயத்ரி
19 அன்பு - open heart
20 பாலா - கடல் புறா
KEEP ROCKING FRIENDS !!!!!!!!
Tuesday, August 25, 2009
யாருமற்ற......
யாருமற்ற வெட்டவெளியில்
சிறகு விரித்து பறக்கும் இந்த
சின்ன புறா
பெற்றவர்களும் மற்றவர்களும்
இணையாய் வந்தவரும்
துணை என சொன்னவர்களும்
தங்களுக்கு தாங்களே
வட்டமிட்டு குறுக்கிக்கொள்ள நான்
தனிமைத்துயரில் தவித்து
தக்கையாகிவிட
கசப்பேறிய மனதோடு
வெளிப்படுத்தமுடியாத
கோபமும் ஆதங்கமும்
நிராசையுமாக வாழ்கையை
கடத்திக்கொண்டிருக்கின்றேன்
எல்லோரும் சூழ இருந்தும்
_________யாய்....
Monday, August 24, 2009
நண்பர் சிங்கை நாதனுக்காக பிரார்த்திப்போம்
நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
சக்தி
Saturday, August 22, 2009
அழகு ....காதல்.... பணம்.... கடவுள்???
இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருக்கும் ஹேமா அவர்களுக்கு நன்றி இன்று வலையுலகத்தின் சமூக அக்கறையுள்ள பெண் கவிஞர் +என் அபிமானத்திற்குரியவரும் கூட இவரின் கவிதைகளில் உள்ள கருத்துகள் எனை அதிகம் சிந்திக்க வைக்கும் இந்த வலையுலகத்தில் நான் நுழைந்த புதிதில் இவரை கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு .அவர்கள் எனை தொடர் பதிவு எழுத அழைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி
அழகு
புற அழகு கண்டு தான் நாம் அனைவரும் நடைமுறை வாழ்கையில் பழகுகின்றோம் இது தான் நிஜம் ஆனால் அவர்களின் உண்மைமுகம் காணும் போது வெகுவாய் வருத்தப்படுகின்றோம் எதை
அழகு என்று நாம் நினைக்கின்றோமோ
அது அழகு அல்லஅது விரைவில்
அழிந்து விடக்கூடிய ஒன்று
இதை உணர்பவர்கள் வெகு சிலரே.....
அன்னை தெரசா போல்
அழகி யார் உள்ளார்கள் இந்த உலகில்
மறைந்தும் கூட நம்
மனதை விட்டு அகலாத பேரழகு!!!
காதல் இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது இனக்கவர்ச்சி தான் உண்மை காதல் அழிந்து கொண்டு வருகின்றது காதல் கூட பண்டமாற்று முறை போலாகிவிட்டது வேதனைக்குரிய விஷயம் இதை பற்றி நான் முன்பு எழுதிய வரிகள் இது
ஞாயிறுகளில் ஆரம்பிக்கப்படும்
நட்பு எனும் பெயரில்
திங்களில் திரிந்து
செவ்வாயில் கனிந்து
புதனன்று காதல் சொல்லப்பட்டு
வியாழனன்று மோகம் வென்றுவிட
வெள்ளியன்று ஊடல் கொண்டு
சனியோடு தொலைந்து போகின்றது
இப்பொழுது காதல் எனும் பெயரில்
உதிக்கும் இனக்கவர்ச்சி இளையவர்களிடம்
பணம்
மனிதனால் உருவாக்கப்பட்ட வஸ்து
ஆனால் இன்று மனிதர்கள்
இதை வைத்து தான் மதிக்கப்பட்டு வருகிறார்கள்
என்பது தான் நிஜம்.
இந்தியா முன்னொரு காலத்தில்
உலகத்தால் வியந்து பார்க்கப்பட்ட நாடு
இன்று ஏழை நாடுகளின் பட்டியலில் எனவே
இந்தியர்கள் மேலை நாடுகளின்
கலாசாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றோம்
எனவே பணம் இருக்கும் நாடு,மனிதனை தான்
எல்லோரும் விரும்புகின்றார்கள்
அவர்கள் எப்படியிருந்தாலும்.....
கடவுள்
ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு விதமாய் பெயரிடப்பட்டு
வித விதமாய் வழிபட்டாலும்
அன்பு தான் கடவுள்
அன்பே சிவம் என்னும் இந்துத்துவம்
அல்லா கருணை உள்ளவர் என்னும் முஹம்மத்
இயேசு இரக்கம்உள்ளவர் எனும் கிறிஸ்தவம்
என்றாவது அடுத்தவரை இம்ச்சிக்கசொல்கிறதா !!!
கடவுளின் பெயரால் மனிதம் தொலைவது தான் மிக கொடுமை!!!
இது தான் என் எண்ணம் ,கருத்துகள்
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது
நட்புடன் ஜமால் அண்ணா
நவாஸ் அண்ணா
பிரியத்திற்குரிய வசந்த்
கடல்புறா பாலா
ஜெஸ்வந்தி
ரம்யா அக்கா
Friday, August 21, 2009
மிருகம் ஒன்று!!!!
பின்னிரவில் எனக்குள்
எழும் மிருகம் ஒன்று
தன்னிரு கரங்களுடன்
எனை அழிக்கவேண்டுமென்று....
என்னால் ஒரு கட்டத்தில் நேசிக்கப்பட்டது
என் மடி மேல் அமர்ந்து
என் தசைகளை தின்றழிக்கும் இன்று....
முப்பதுக்கு மேல் அதை நான்
மூர்ச்சையாக்க எண்ண
ஏனோ அது உயிர்தெழுந்து தொலைகின்றது....
இம்மிருகம் நான் கொல்வேனோ??
இல்லை மிருகம் எனை கொல்லுமோ?
Wednesday, August 19, 2009
உயிர் குடித்தல்!!!!
அந்த வாகனக்காற்று
அளாவியதில்
தொங்குநிலைஎன் உடல் அசைந்தது
விழிப்புற்றேன்
சோம்பல் முறிய
கொதிக்கும் தார் மணத்தால்
சூழப்பட்டிருந்தேன்
காற்றின் வெக்கை
கை கால் உதைத்தேன் காற்றுவெளியில்
அழத்தொடங்கினேன்
எங்கே அவள் ?
என் உணர்ச்சி புரியாதவளா ?
இல்லையே ?!
என்னுயிரின் வலியையே உணர்பவளாயிற்றே ?!
வருகிறாள் வருகிறாள்
அவளுக்கு இடம் மாற்றப்பட்டேன்
ஊசி முனைத்துவாரவழி
முறிந்த இரத்தத்தை
என்னுள் புகட்டும் ஆயத்தம்
ஆமாம் !
என்னுள் புதைந்த
சுரபி வழி
அவள் உயிர் குடிக்கும் முயற்சியில் நான் !!!!!!!!!
அடிப்பாவி !!!!!!!
உன் வறுமையின் சாரத்தை எல்லாம்
இங்கேயா இறக்கி வைத்திரு க்கிறாய் !!!!!!!!!!!!!!!????????????????????????
சண்டாளி !!!!!!
திரவமே இல்லையேடி
அவளுக்கு எட்டவில்லை
என்னவோ முணுமுணுக்கிறாள் !
"பாவி பயலுவோ இத கூட
கண்ணு வாங்காம "
நான் உயிர் குடிக்கும்
முயற்ச்சியில் தீவிரமாய் இருந்தேன் ...பி.கு : சில கவிதைகள் மனதை விட்டு அகலாது இது நான் மிகவும் ரசித்த கவிதை இந்த வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய என் உடன் பிறவா சகோதரர் பாலாவின் கவிதை.
அவர் வலைத்தளம் கடல் புறா
Tuesday, August 18, 2009
அக்னி(அன்பு) மழை....
இன்று அழகிய நந்தவனமாய் காட்சியளிக்கும்
இதே வையம் தான் அவ்வப்போது நடுங்கி
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
பழிவாங்கியது
அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்தது
நீல நிறத்தில் ரம்யமாய் மிளிரும் இவ்வானம்தான்
சில நேரங்களில் கனமழை பொழிந்து
எத்தனையோ பேரை காவுகொண்டது
தென்றலாய் என் வாசலில் நிற்கும் குளிர்காற்று
தான் ஊழியாய் அன்று ஊரை சூறையாடியது
ஆனால் இவை எதையும்
என்னால் வெறுக்க முடிவதில்லை
அதே போல் அவ்வப்போது
எரிமலையாய் வெடித்து என் மேல்
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழியும் உன்னையும்.......
Monday, August 17, 2009
ஜெயிக்க போவது யாரு??
என்ன இது சின்னபிள்ளைத்தனமான கேள்வின்னு நினைக்கலாம் நீங்க???
ஆனால் இது நாளை நடைபெறபோகும் இடைத்தேர்தலுக்கான கேள்வி
யார் ஜெயிக்க போவது???
சமபலம் உள்ள எதிர்கட்சி தோல்விக்கு பயந்து ஒளிந்து கொள்ள
ஆளும்கட்சிக்கு அடிக்கப்போகின்றது ஜாக்பாட்
கூடவே அக்கட்சியின் தொண்டர்கள்
ஆற்றியிருக்கும் களப்பணி அத்தனை அற்புதமானது. வீடு வீடாக ஒருஓட்டிற்கு
ரூபாய் 200 வினியோகித்துள்ளார்கள் . மேலும் கடந்த 15 நாளாக சும்மா
பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வாக்காளர்களை போதை மழையில்
நனைத்து உள்ளனர் .அவ்வப்போது விருந்து வேறு கனஜோராய்
இது போதாதா இவர்கள் ஜெயிப்பதற்கு???
இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் எதிர்கட்சியின் முக்கிய
பொறுப்பாளர் வீட்டிற்கு சென்று ஓட்டை விலைபேசி தர்ம அடி வாங்கி
திரும்பிள்ளனர் சிலர் பாவம் பரிதாபத்துக்குரிய தொண்டர் குழாம்.
ஒரு ரூபாய்க்கு அரிசி என பெரிதாய் பெருமையுடன் கூறியவர்கள். இப்பொழுது
விண்ணை தொடும் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் விலை வாசி
உயர்வுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்???
சிலர் கூறலாம் விலைவாசி உயர்வுக்கு இவர்கள் என்ன செய்யமுடியும் என்று
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பதுக்கல்களை கட்டுக்குள் கொண்டு
வந்தாலே போதும். ஆனால் கள்ள சந்தை மத்தியில் உள்ளவர்களின்
பேராதரவோடு அல்லவா நடக்கின்றது. இவர்களிடம் காசை வாங்கிக்கொண்டு
ஓட்டளித்த நம் மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
உலகளவில் உயர்வாக பேசப்பட்ட இந்திய ஜனநாயக முறைக்கு இப்படி ஒரு
அவல நிலை ஏற்பட்டிருக்க வேண்டாம்.
பணத்திற்கு ஓட்டுரிமையை விற்கும் கேவலமான நிலை. எப்பொழுது தான்
நாம் திருந்த போகின்றோம் என தெரியவில்லை????
காமராஜர், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் இருந்த நாடு ஆனால்
இப்பொழுது பாவம் பதவி வெறி பிடித்த சிலரால் படாத பாடு
பட்டுக்கொண்டிருக்கின்றது.....
என்று கிடைக்கும் இவர்கள் அனைவரிடமிருந்து மீண்டும் ஒரு சுதந்திரம்???
Sunday, August 16, 2009
காணவில்லை!!!
கற்போம் வாருங்கள் பின்தொடர்வோம் நண்பர்களே!!!
Wednesday, August 12, 2009
அழகிய பிரம்மாக்கள்!!!
உடைத்தெறியப்பட்ட பொம்மைகள்
கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்
டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்
பென்சில்களாலும் கிரேயான்களாலும்
கிறுக்கப்பட்டு நவீன ஓவியங்களாய்
காட்சியளிக்கும் சுவர்கள் அவ்வப்போது
மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்
இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......
Monday, August 10, 2009
வண்ணத்துப்பூச்சியின் கனவு....
வானம் முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த
வண்ணத்துப்பூச்சியின் சிறகை பறித்துவிட்டார்கள்
சிறையில் அடைத்துவிட்டார்கள்....
ஜந்தும் பத்துமாய் அவள் சேர்த்து வாங்கிய
ஆக்ஸ்போர்டு அகராதி இப்போது
காகிதக்கப்பலாகி அவள் கண்ணீரில் மிதக்கின்றது....
பத்தாம் வகுப்பில் அவள் அணிந்த
சாயம் சற்று வெளிறிய சீருடை தாவணி
அவள் பிள்ளைக்கு தொட்டில் சீலையாகபோகின்றது.....
கால் பவுன் தங்கத்தாலும்
சிறு கயிற்றாலும் அவளின்
கல்லூரி கனவுகள் கலைக்கப்பட்டது
கற்பனைகள் சிதறடிக்கப்பட்டது....
இந்த கனவை அவள் சொல்லப்போவதுமில்லை....
சொன்னாலும் யாருக்கும் புரியப்போவதுமில்லை....
Friday, August 7, 2009
ரகசியமானது காதல்!!!
சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!
யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!
உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!
Tuesday, August 4, 2009
வல்லமை தாராயோ !!!!
பதுங்கு குழியில் பதுங்கிடவும்
நண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்
பங்கிடுவதை பார்த்திடவும்
மழலைகளின் மரணங்களை கண்டு
மனம் தளராதிருக்கவும்
கற்பு நெறிகள் கயவர்களால்
காற்றில் கரைவதைகண்டும்
செம்புனல் கண்டு சிதறாமலும்
வன்கொடுமை கண்டு வளையாமலும்
இருக்க வல்லமை தாராயோ!!!!!!!
யுத்த பூமி
பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்துஇறப்பதும் வையத்து வாழ்வு
பிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு
முழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி
பாட்டொலி உழவொலி இங்கு இல்லை
மறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு
புத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்
இங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது
இங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது
இது யுத்த பூமி எங்கேடா சாமி???
கரியும் வைரமாகும்
கூழாங்கல் கரியை கண்டதுகர்வத்தில் சிரித்தது
கரி தன்னை பூமியில் புதைத்தது
காலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்
பூமிக்குள் புதையும் என் இனம்
யுகங்கள் கழியும்
மண்ணில் புதைந்த மக்களும்
கரியும் வைரம் ஆகும்
இறைமை கரி கட்டையின் பொறுமைக்கு
அதை வைரம் ஆக்கும்
ஆனால் கூழாங்கலே
எங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்
எம்மை கண்டு எள்ளி நகை ஆடும்
அனைவருக்கும் இது பொருந்தும்
நிறுத்துங்கள் தோழர்களே
உதித்திடும் செங்கதிரோன் எங்கள்உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்
அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்
ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்
ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவது???
போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது
பி.கு : நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் என் மக்களுக்காக ஆதங்கத்துடன் எழுதிய கவிகளில் சில உங்கள் பார்வைக்கு சிலர் உங்களின் பழைய பதிவுகளை தவற விட்டுவிட்டோம் என கேட்டுக்கொண்டதற்க்காக மீண்டும் என் மற்றொரு வலைதளத்தில் இருந்த கவிதையை இங்கு பதிவிடுகிறேன்......
Sunday, August 2, 2009
ஒரு நல்ல சேதி நண்பர்களே!!!
உங்களுக்கு ஒரு நல்ல சேதி கொலை வெறி கவிதை (கவுஜ) அதிகம் எழுதி உங்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய இந்த வீட்டுப்புறா இனி சில கட்டுரைகளும் எழுத உள்ளது.ஆனால் இந்த தளத்தில் அல்ல தமிழர் உணர்வுகள் எனும் என் முதல் தளத்தில்......
இன்று முதல் தமிழர் உணர்வுகள் எனும் அந்த தளம் சக்தியின் உணர்வுகள் என பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது அதில்,அரசியல்,ஆன்மீகம்,யோகம்,தியானம்,ரங்கமணிபதிவுகள் என இன்னும் எனக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றதோ அதை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள போகின்றேன்.
அதில் முதல் பதிவு நம்ம ஊர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து எழுதப்பட்டு உள்ளது வலையுலகத்தில் உள்ள என் நண்பர்களே அந்த மிகப்பெரும் விஞ்ஞானிக்கு நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.....