Monday, July 26, 2010

பிஞ்சுகள் துயின்றிடும் பொழுதில்!!!


























மெல்லிய விரல்களால்
என் நரம்பு வயல்களில்
நடவு நட்டு....

என் வெப்பத்தை
போர்த்துக் கொண்டு
உறங்கவேண்டுமென
உப்பு மலர்களை
உதிர்க்கின்ற குட்டி நட்சத்திரம் ஒன்று!!!

ஊற்றாய் சந்தோஷம் பொங்கிட
உள்ளார்ந்த குறும்பில்
உதட்டோரம் சிறு குழிவுடன்
செம்பஞ்சுக்குழம்பில் தோய்த்த
பிஞ்சப்பாதங்களுடனும்

செல்லச்சிணுங்கலும்
மெல்லிய மினுங்கலுமாய்
என் மார்போடணைத்து
மடி மீது அமர்ந்து
சிறு கதை சொல்ல
கேட்டு கண்ணயரும்
பட்டுத்தென்றல் மற்றொன்று!!!!

இவர்களின்
மோகனப்புன்னகையில்
மயங்கி நின்றதில்
என் கவிதைகள் யாவும்
முற்றுப்பெறாமல் முடிந்துவிடுமின்று.....

Wednesday, July 14, 2010

நிலவின் ஒளியில் உருகும் சூரியன்!!!


சூரியன் தன் வீரியத்தை
தொலைத்த கோபத்தில்
சிவந்து தணிந்து
கொண்டிருந்த வேளையில்

ஒரு தர்க்கத்தின் முடிவில்
உயிரை கருக செய்யும்
திராவகத் துளிகளை
அவன் வார்த்தைகள் சிதற

கந்தகமிட்ட காகிதமாய்
வெந்து உலர்ந்தது நெஞ்சம்
உணர்வுகளின் மௌன மறுகல்
ஊமை மலர்களின் மௌன விகசிப்பாய்
மெல்ல மெல்ல குறைந்தது விசும்பல்கள்

சற்றே மனம் அடங்கி குளிர
வெட்க புன்னகை யொன்று இதழ்களில் தோன்றி
தேகம் முழுவதும் பரவ
விழி நாணேற்ற
முறிந்தது அவன் திமிர்

உள்ளே ஏதோ ஒன்று இற்று உருகிட அதன்
சாறாக கண்ணில் நீர்!!!!

Wednesday, July 7, 2010

வன்மம் தீரா பெருவெளி!!!


நெடியதொரு தனிமைவெளியில்
நான் நதியின் ஊடாக
அலைவு கொண்டிருந்தேன்!!!

சலனமற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை!!!

விதியின் சறுக்குப்பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கிக் கொண்டிருக்க!!!

சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!

Saturday, July 3, 2010

என் அன்பு மகன் பாலாஜிக்கு பிறந்த நாள் இன்று!!!!




எண்ணற்ற தவத்தின் பலனாய்
எனக்குள் உதித்த சூரியனே!!!

மலரிதழ்களில் வியர்த்திருக்கும்
பனித்திவலைகளாய்
உன் மழலை மந்தகாசமும்
குறுகுறுத்த விழிகளில்
கசியும் புன்னகையுமாய்
எனை வளைய வரும்
பேசும் பொற்சித்திரமே!!!
இன்று பிறந்த நாள் காணும் நீ
பார்போற்ற பல்லாண்டு காலம்
நீடுழி வாழ வாழ்த்துகிறேன்!!!!