Thursday, December 23, 2010

மிருகம் ஒன்று ( இரண்டாம் பாகம்)


நான் நேசித்து வந்த
மிருகமொன்று
யாசித்து வந்தது
யோசித்து சொல்வதாய்
பேசித்து அனுப்பி
தவிர்த்திருக்க....

தனித்திருந்து
தனித்திருந்து
பசித்திருந்த
அம்மிருகம்
மென் தசைகளும்
குருத்தெலும்புகளும்
நொறுக்கி
மெதுவாய் எனை வென்றது
பின்னொரு நாளில் கொன்றது!!!

Tuesday, December 14, 2010

கரைந்த நிழல்.....


தூக்கம் வேர்பிடிக்காத் தருணமொன்றில்
தனிமையின் சாளரத்தில் வீற்றிருந்தேன்
அந்தியெங்கும் சாம்பல் வர்ணோவியம்
கோட்டுச்சித்திரமாய்.....

சிலந்தி வலை பின்னலாய்
தொடரும் சிந்தனைகள்.....

எங்கோ ஒரு ஒலம் கேட்க
மனம் பதைத்து வெகுதூரம்
தேடியலைந்தேன்.....

பின் இலை பெய்து முடித்த
மரமொன்றின் கீழ் நின்று
என் நிழல் நோக்க அது
விம்மிக்கொண்டே கரைந்தழிந்தது.....

எனக்கு நானே துணையில்லை
என்பதை உணர்ந்து மனம் பதைக்க
இலக்கற்று நடக்கத்தொடங்கினேன்.....

Wednesday, December 8, 2010

பேசும் பொற்சித்திரமே!!!!


கன்னத்தோடு கன்னமிழைத்து
முத்தம் நூறு தந்துவிடு
கண்ணிமை வருடலில்
கவலையெல்லாம் தீர்த்துவிடு....

முந்தானை போர்வைக்குள்
முகம் போர்த்து
பூ விழி வருடலில்
என் மனம் சாய்த்து
என் உதிரம் சுவைத்து வளர்ந்த
பிள்ளைக்கனி அமுதே
பேசும் பொற்சித்திரமே...

உன் பிஞ்சு பால் சதையை
அள்ளியெடுத்து
கொஞ்சி மகிழ்கையில்
உளம் களித்திருப்பேன்
எதிர் வரும் இன்னல் யாவும்
எதிர்த்து நான் நிற்பேன்........




Monday, December 6, 2010

பிரிய தோழி தீபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!



பள்ளி தோழி அவள்...
என் பால்யத்தில் பாதி அவள்...
பாசமிகு சிநேகிதியாய்...
பதின்ம வயதில் என் காதலியாய்...


பசுமரத்தணியாய்
பதிந்திருக்கும்
சிநேகத்துடன்
கரம் கோர்த்து அவளுடன்
சுற்றி திரிந்த நாட்கள்


இன்று பாரதத்தின் ஏதோ ஒரு
மூலையில் நீயும்....
மற்றொரு மூலையில் நானும்....

உன் குடும்பத்தாரின்
அன்பு வலையில்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
என் பிரிய சிநேகிதியே....

இன்று பிறந்த நாள் காணும்
நீ என்றும் நலமே வாழ
வாழ்த்தும்
உன் அன்பு தமிழ்....

I MISS YOU A LOT MY DEAR.....