Wednesday, December 19, 2012



விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில்
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
ஜா.ராஜகோபாலன்
விமர்சகர் மோகனரங்கன்

இயக்குனர் சுகா
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)


இசைஞானி இளையராஜா
எழுத்தாளர் ஜெயமோகன்
கவிஞர் தேவதேவன்

ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 ,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .


 தேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம்
தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே இ.ராஜாகோயில்

தேவதேவனின் கவிதைத் துளிகள்.......


’தனிமைக் குளத்தில் இறங்கினான்

கொஞ்ச நேரத்தில் குஞ்சுமீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை’



’அசையும் போது தோணி

அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற் பொழுதே தூரம்’


’மோகம் ததும்பும் நீர்ப்பரப்பு

தீராவேட்கையில்
துள்ளி எழும் மீன் துடிப்பு
படக்கென்று நிறைவேறியதென்ன
லாவகமாய் கொத்திச்
சென்றது ஒரு பறவை
வானில் நீந்தி’
(குளித்து கரையேறாத கோபியர்கள்)

-- நீரில் மேற்பரப்பில் ஒரு மீன்

துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை’
(துள்ளல்)



உனக்குப் புரிகிறதா இதெல்லாம்?
துள்ளுகிறதா உன் இதயம்?
அதுதான் காதல் என்பது

காதல் என்பது இனங் கண்டுகொள்ளல் அல்ல

காதல் என்பது காணுதல் ஆகும்
தனக்குள் இருக்கும் உன்னதத்தைத்
தான் கண்டுகொள்ளல், மற்றும்
என் உன்னதத்தை உன் உன்னதம்
அல்லது உன்னதை என்னது

பிறிதெது வொன்றும் காதல் ஆகாது
.....



இலக்கிய வட்டம் ஏராளமானவை இங்கிருந்தாலும் சில சமயம் அவை மிகச்சிறந்த எழுத்தாளர்களை கெளரவம் செய்வதை மனம் நிறைந்து பாராட்ட வேண்டியது நம் கடமை ... 
கவிஞர் தேவதேவன் தமிழ்க்கவியுலகில் ஆகச்சிறந்த கவிஞரில் முதன்மையானவர்... அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிற்ப்பிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.....

 

Saturday, June 16, 2012

என்ன தவம் செய்தனை !!!!

கார்த்திக் நேற்று இரவு பேனாவும் பேப்பருமாக அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான் . என்ன தங்கம் எழுதறே என கேட்டதுக்கு உனக்கு தான் மா எழுதறேன்னு சொன்னான். அப்படியா என்ன எழுதறேன்னதும். கவிதை மா என்றான்.
பயங்கர அதிர்ச்சியா இருந்தது அதுக்குள்ளயா????? அப்படின்னு அதிர்ச்சியோட சரி நீ என்ன எழுதியிருக்கே படிச்சி காட்டு என்றேன்....

அம்மா உன்னிய எனக்கு நெம்ப பிடிக்கும்
உன் பக்கத்துல நான் எப்பவும் இருக்கணும் அம்மா
உன் கழுத்தை கட்டிப்பிடிச்சுட்டே நான் தூங்கணும்
உன் மடியில எப்பவும் நான் தான் உட்கார்ந்துக்கணும்
நீ நான் கேட்கறது எல்லாம் வாங்கி குடுக்கறே அம்மா
நீ ரொம்ப நல்ல அம்மா

ஆனால் இந்த பாலாஜி இருக்கானே அவன் ஒரு லூசு மா
அவனுக்கு அப்பாவை தான் பிடிக்குமாம்.
அவன் அப்பாவை போய் கட்டிப்பிடிச்சுட்டு தூங்கறான் மா
அவனுக்கு உன்னை விட அப்பாவை தான் பிடிக்கும்ங்கறான் மா

எல்லாம் சரி மா ஆனால் நீ அப்போ அப்போ அடிக்கறே
அது மட்டும் எனக்கு பிடிக்கல அப்போ உன்னிய
அப்பாகிட்ட சொல்லி அடி வாங்கி குடுக்கணும் போல இருக்கு

இதான் எங்க வீட்டு வாலு எனக்கு எழுதின கவிதை ??????

::)))))

இப்பவே இப்படின்னா பின்னாட்களில் எப்படியோ!!!!!!!!!!!!!!!!


( முன்பு கூகிள் பஸ் ல எழுதியது )

Tuesday, April 24, 2012

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்....




திரிபு வார்த்தைகளும்
தத்துவார்த்த பிழைகளும்
தின்மச் சொற்களும்
தந்த ரணங்களை சுமந்து
இடர் சூழ்ந்த இவ்வுலகில்
பொருள் தேடி அலைகிறேன்....

துயரம் சொல்லொணாத் 
தவிப்புடன் உடல் நிறைக்க
இறுகிப்போன சக்கையாய் மனம்....

நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்
தன்னந்தனியாய் தவிக்கும் 
அழுகையின் நிறம்
மீளாத்துயருடன்
பின் தொடரும் நிழலாய்
நினைவுதிர்த்து போகின்றது.....

Friday, July 1, 2011

காலாதி காலங்களாய்....




பிரக்ஞையற்று திரிந்தலைந்த
கிரெளஞ்சப் பட்சியொன்று
மனவெளியில் தரையிறங்கியது
மிச்சமிருக்கும் வதைகளின் பொருட்டு
தீரா வேட்கையுடன் உயிர்த்தலின்
ஆதாரத்தை அலைகிழிக்கின்றது
கூர்ந்த நகங்களால்....

காலாதி காலங்களாய்
தொடர்ந்த மெளனம்
களைந்தெறிந்து
ஊழியின் உருவமாய்
மெய் சிவந்து நின்றேன்
எதிர்கொள்ளவியலாது
சிறகின் தூவிகள் பொசுங்க
ரத்தமும் மாம்சமும் கருக
வெந்தொழிந்தது.....

நன்றி : திண்ணை

Monday, May 2, 2011

பிரியம் சுமக்கும் சொற்களால்..... (பகுதி2)



பிரியம் சுமக்கும் சொற்கள்

கொண்டு உனக்காய்

வடிப்பேன் ஒரு கவிதை....

மெளனக்கிடங்கில் மறைக்கப்பட்ட

மனதின் மென்மைகளை

அதில் பொதித்து

நீ அண்மிக்கையில்

பரிசளிப்பேன்

வெட்கம் குமிழ் குமிழாய்

உடைத்தபடி......

உன் நயன பாஷைகள் கண்டு

அந்தரங்கத்தில் மலரும்

சித்திரங்களின் மொழி

நானறிவேன்.....

மென்று விழுங்கும்

பார்வையுடன் நீ

என் முன் நிற்க

எல்லாம் புரிந்தும்

ஏதுமறியாச் சிறுமியாய்

நான் நிற்பேன்....

மறுதலிக்கப்படும் அன்பின் வலி

என்றும் நான் உணராதிருக்கவேண்டும்

என பிரார்த்தித்துக்கொண்டே.....


நன்றி : திண்ணை

Monday, April 4, 2011

பிரியம் பொதிந்த சொற்களால்......


நித்திலப்புன்னகை சுடர் வீசிட
எனை நித்தமும் கொஞ்சிடும்
சித்திரப்பூவே.....


கருத்தொருமித்த காதலின்
பரிசாய் என் கருவறையில்
கனிந்திட்ட கனியமுதே....

நின் முகத்தினெழிலிங்கு இயம்பிட
முயன்று முத்தமிழும் தோற்றிட்ட
அற்றைய பொழுதில் அகமகிழ்ந்தேன்.....

மெல்லிதழாலும் பூங்கரத்தாலும்
இன்பப்பொழினிடையில்
உயிரினமுதம் பொழிகையில்
என் சிந்தை திறை கொடுத்தேன்....

என் புலன் வருத்தி இப்புவியில்
நீ பாதம் பதித்த இந்நாளில்
நமையாளும் ஈசனிடம்
நலம் பல உனை சார்ந்திட
நல்லருள் செய வேண்டுகிறேன்....

இன்று என் இளைய மகன் கார்த்திகேயனின் பிறந்த நாள்
வாழ்த்துங்கள் நண்பர்களே ........

Wednesday, March 9, 2011

நீளும் இகற்போர்...


.

சிநேகத்தின் வேர்கள்
கருகுவதை கண்டு
உயிர்ப்பின் தாளலயம்
ஸ்வரம் தப்பிடும்...

நிகழ்கால நிஜத்திற்கும்
இறந்தகால நிழலிற்கும்
நடுவே மனம்
வெகுவாய் அலைப்புறும்....

பொய் என தெரிந்தும்
மெய் அன்பின் வாசனையை
விரும்பும்....

இனம்புரியா ஏதோ ஒரு
உணர்விழைநெய்யப்படுவதும்
நெய்யப்பட்டஅம்மாயத்திரை
சிதறடிக்கபடுவதுமாய்
நீளும் இகற்போரில்
என் நெஞ்சம் துவளும்...